Contact/ தொடர்பு கொள்க

சொல்வனம் முப்பத்தொன்று - 2

நான் ஒன்றும் பெரிய யோக்கியன் இல்லை.

எந்த நேரத்தில் ராமன் ராஜா நன்றாக எழுதுகிறார், சக்கை போடு போடுகிறார், style wins over substance - என்றெல்லாம் சொன்னேனோ, இந்த சொல்வனத்தில் சொதப்பி விட்டார். இதை சொல்லக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்ன செய்வது? எனது நண்பர் ஒருவர், இதைப் பற்றியெல்லாம் எழுத மாட்டீர்களா என்று கேட்ட பின்னும் நேரமில்லை அது இது என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இவரை மாதிரி நண்பர்கள் இருக்கிற வரை என்னால் மனசாட்சியை மூட்டை கட்டி வைத்துவிட்டு நிம்மதியாய் இருக்க முடியாது. நீங்க நல்லா இருங்க ஐயா!

ராமன் ராஜா DSM மீது பல நியாயமான குற்றங்களைக் கூறி இருக்கலாம். ஆனால் DSMஇல் நோய்களை வகை பிரித்து பேர் சூட்டி இருப்பதே மருத்துவ நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் என்று சொல்லியிருப்பது ரொம்ப ஓவர். இது தீவிர இடதுசாரி அல்லது வலதுசாரி என்று ஏதோ ஒரு சாரியில் போகிறப் பத்திரிக்கையில் வந்திருந்தால் தனியாகத் தெரிந்திருக்காது: ஆனால் பன்முகப் பார்வைகளை வழங்குகிற  சொல்வனத்தில் பொருத்தமில்லாமல் தனியாகத் தெரிகிறது.

இந்த விஷயத்தைப் பேசும்போது இன்னொரு குறையும் சொல்லத் தோன்றுகிறது: கட்டுரைகளை எழுதுகிறவர்கள் கூடுமானவரை சுட்டிகளைத் தர வேண்டும். புத்தகம் என்றால் பெயர் மற்றும் பக்க எண்கள், வலையில் கிட்டுகிறதென்றால் உரலி. அதுதானே நியாயம்? ராமன் ராஜா நிறைய குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டே போகிறார், ஆனால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவைகள் சொல்லப்படுகின்றன என்பதை உணர்த்த ஒரு சுட்டி கூட இல்லை. ஒரு அறிமுகக் கட்டுரை, நகைச்சுவை கட்டுரை என்றால் பரவாயில்லை- தலையங்கத்துக்கு ஒப்பான கனமுடைய விஷயத்தை எழுதும்போது சுட்டிகளை நிராகரிப்பது அவ்வளவு சரியாகத் தெரியவில்லை.

DSM குறித்து மேற்கத்திய நாடுகளிலேயே தீவிரமாக விவாதிக்கிறார்கள்: சில சுட்டிகள்:
ராமன் ராஜா ADHD மற்றும் அநியாயத்துக்கு நோய்களை வரையறுத்து மருந்து தருவது குறித்துத் தெரிவித்த கருத்துகளை ஒத்த சுட்டி இங்கே.  இது தவிர ஏறத்தாழ எல்லாரையுமே மனநோயாளிகள் என்று சொல்கிற வகையில் DSM வரையறை செய்கிறது என்று சொல்பவர்கள் இங்கே, இங்கே, இங்கே. இது போல் இன்னம் பல தரலாம் உதாரணத்துக்கு  இங்கேயும் ஒன்று. இதன் அபத்தங்கள் இங்கே.

இப்படி சுட்டி தருவதால் இண்டர்நெட்டைப் பார்த்து கட் அண்ட் பேஸ்ட் செய்கிறான் என்று சொல்வார்கள்- சொல்லுபவர்கள் சொல்லிக்கொண்டு போகட்டும். ஆங்கிலத்தில் எழுதுகிறவர்கள், விஞ்ஞானிகள்கூட, சுட்டி தரத் தயங்குவதில்லை. சுட்டிகள் தருவது நம் வாதத்துக்கு வலு சேர்க்கிறது என்று நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை அமெரிக்க DSM நமக்குப் பொருந்தாது என்று நான் சொல்வதானால் இதுதான் காரணமாக இருக்கும்.

ராமன் ராஜாவின் கட்டுரைக்கு எதிராக இன்னொரு விஷயத்தை சொல்லலாம்- அவர் ரொம்ப எளிமைப்படுத்தி இருக்கிறார் என்று- என் நண்பரின் குற்றச்சாட்டு, குறிப்பாக இது குறித்தே-
"DSM என்பது உலகம் முழுவதும் பரவலாக மருத்துவர்கள், மருந்துக் கம்பெனிகள், ஆராய்ச்சியாளர்கள் உபயோகிக்கும் கையேடு. சென்ற முறை இதில் குழந்தைகளின் புதிய வியாதியாக ADHD - அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர் ஆக்டிவிடி டிஸார்டர் - என்று ஒன்றைச் சேர்த்தார்கள். தம்பிப் பாப்பாவை அம்மா தூக்கிக் கொஞ்சும்போது அண்ணன்காரன் பொறாமையில் அழுது அடம் பிடிக்கிறானே, அதற்குத்தான் இப்படி ஒரு திகிலூட்டும் வியாதிப் பெயர். 
இதைப் படித்துவிட்டுப் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ADHD வந்துவிட்டது என்று பதறிப் போய் டாக்டரிடம் ஓடினார்கள். ஒரு கால கட்டத்தில் ADHD என்பது தொற்று வியாதியாகவே ஊர் ஊராகப் பரவியது. 
அடுத்து அமெரிக்க டாக்டர்கள் செய்ததை ……த்தனம் என்றே வர்ணிக்கலாம். குழந்தைகளின் ‘நரம்புகளை அமைதிப் படுத்துவதற்காக’ ரிட்டாலின், அட்டெரால், வைவென்ஸே போன்ற தீவிரமான மருந்துகளை, மை தீரும் வரை பிரிஸ்கிரிப்ஷன் எழுதித் தள்ளிவிட்டார்கள்! 2008-ம் ஆண்டில் இந்த மருந்துகள் அமெரிக்காவில் 480 கோடி டாலருக்கு விற்பனை ஆகியிருக்கின்றன. அமெரிக்கக் குழந்தைகள் மட்டுமே விழுங்கிய ரிட்டாலினைக் கணக்கெடுத்துப் பார்த்தால் உலகத்தின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் வசிக்கும் எல்லா மனிதர்களும் விழுங்கியதைப் போல் ஐந்து மடங்கு. 
இந்த மருந்துகளுக்கெல்லாம் மிக மிக ஆபத்தான பக்க விளைவுகள் இருக்கின்றன. ரிட்டாலினின் பக்க விளைவுகள் என்பதை விக்கி பீடியாவில் பார்த்தால் A முதல் X வரை சரம் சரமாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அட்டெரால் என்பது போதை மருந்துகளின் காக்டெயில்! இதையே யாராவது ரோட்டில் வைத்து விற்றால் கஞ்சா கேஸில் போலீஸ் பிடித்துப் போய்விடும். அதை ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ‘அடம் பிடிக்கும் வியாதி’க்காகக் கொடுத்திருக்கிறார்கள். வைவன்ஸே சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்ட குழந்தைகள் உண்டு"
இது மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம்- நம்மைப் போன்ற பொது மக்கள், இந்த மருந்து மாத்திரைகளின் பயனாளர்கள் இப்படி பேசவும் செய்கிறார்கள். ADHD என்றொரு பிரச்சினை இல்லை என்று சாதிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இதன் அடிப்படை, நோய்க்கூறுகள் நம்பத்தகுந்தனவாக இருப்பினும் இல்லாவிட்டாலும், இந்த மாத்திரைகளை சாப்பிட்ட குழந்தைகளில் பலர் நன்றாகவே இருக்கிறார்கள்.

நான்கூட, இப்படிப்பட்ட பிள்ளைகளைதான் நாம் மக்கு என்று படிக்கும் காலத்தில் ஒதுக்கி வைத்தோம் என்று நினைத்ததுண்டு. ADHDக்கு மருந்து சாப்பிடுகிற குழந்தைகள் அதனால் பயனடைவது கண்கூடான ஒன்று. இதை எந்த மனநல மருத்துவரைக் கேட்டாலும் சொல்வார்கள்.

இந்த விஷயத்தில் அநியாயத்துக்கு அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லியிருக்க வேண்டாம், அதன் பயன்களை நோக்காமல் ஒரேயடியாக பயம் காட்டி இருக்க வேண்டாம்: ஒருதலைபட்சமாக எழுதி இருப்பது சரியாகத் தோன்றவில்லை. மருந்துக் கம்பெனிகளின் கையாளாக DSM மாறி விட்டது என்பது போன்ற தொனி அவசியமில்லாத ஒன்று, அவ்வளவு நியாயமில்லாத ஒன்றும் கூட. முன்னமேயே சொன்னதுபோல் இது தீவிர சாரிப் பத்திரிக்கைகளுக்கு மட்டுமே உரிய பார்வை: தன் கருத்துகளுக்கு எதிர் தரப்பு இருக்கக்கூடும் என்பது குறித்த ஒரு வார்த்தைகூட  இல்லாமல் இது எழுதப்பட்டிருப்பது ஒரு பெரிய பின்னடைவு.

ஆனால் ஒன்று: இதை ராமன் ராஜா சிறப்பாக, சுவையாக, அழகாக எழுதி இருக்கிறார். நிச்சயம் படிக்கலாம். படித்தால் நீங்களே அவர் சொன்னதை பெருமளவுக்கு நம்புவீர்கள் என்று நினைக்கிறேன்.

என் தலைவிதி. நேற்று சொன்னதை இன்று தவறென்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது. Style wins over substance என்று நான் சொன்னது முட்டாள்தனம். சாரம் இருக்க வேண்டும் சாமி, அது இல்லாமல் எழுப்பப்படுகிற கட்டிடத்துக்கு சீட்டுக்கட்டு மாளிகைக்கு இருக்கிற பலம்தான் இருக்கும். எவ்வளவுதான் அழகாக, ரசிக்கும்படியாக இருந்தாலும், கண்டவனும் சுலபமாக அதன் கட்டுமானங்களை உடைத்து விட்டுப் போய் விடுவான்.

இந்த இடத்தில் என் மனசாட்சியின் தூக்கத்தைக் கெடுத்துத் தொலைத்த அந்த நண்பரின் சொற்களைத் தருவதே பொருத்தமாக இருக்கும்:
"நீங்கள் உங்களுக்குப்பட்டதை எழுதுங்கள். அது உங்கள் கருத்து.ஓ இப்படியும் யோசிக்கலாமே என்று பார்வை கொஞ்சம் மேம்படும். அதில் மனவருத்தப்பட என்ன இருக்கிறது.
நீங்கள் குறைநிறைகளை எழுதவேண்டும் அப்பொழுதுதானே எழுதுபவர்கள் வளர முடியும்.மரணமொக்கை சொல்வனம் விமர்சனப்பக்கமல்லவா? நியாயம் அனியாயத்தைவிட, தரவுகளையே தவறாகத்தந்தால் அதைச்சுட்டிக்காட்டலாமா?"
ஒருவன் செய்யக் கூடிய தவறுகளிலேயே பெரிய தவறு தெரிந்தே செய்யும் தவறு.  சரியான சமயத்தில் அதை சுட்டிக் காட்டி என்னைத் திருத்திய திரு நண்பர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.





இந்த இதழில் வந்திருக்கிற ராகம் தானம் பல்லவி மிகவும் சுவையான ஒன்று. மேற்காணும் சுட்டி கச்சேரிகளில் எப்படி தாளம் போட வேண்டும் என்பதன் செயல்முறை விளக்கம். எளிய அறிமுகம், ஆனால் இனிய என்று சொல்ல முடியாது- அருண் நரசிம்மனின் குரலைக் கேட்டால் தாளம் தப்பினால் ஸ்கேலால் முட்டியில் தாளவாத்தியக் கச்சேரி நடத்தி விடுவாரோ  என்ற பயம் வருகிறது.

இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது கர்நாடக இசையின் கட்டுமானங்கள் ஒரு கணித சமன்பாட்டைப் போல எவ்வளவு நளினமாக, காம்ப்லாக்சாகக் கட்டப்பட்டிருக்கின்றன என்பது ஒருவாறு தெரிகிறது. அவர் தான் எழுதி இருப்பது அடிப்படை விஷயம்தான் என்று சொல்லிக் கொள்கிறார்- ஆனால் அதனுள் அடங்கி இருப்பது ஏராளம். என் மகனும் மிருதங்கம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறான்: அவன் தனது நோட்டுப் புத்தகத்தில் "தொம் தொம் கிட தக தக தரி கிட தா!" என்று ஏதோ டான்ஸ் மாஸ்டர் கணக்காக எழுதி வைத்திருக்கிறானே, இதற்குத்தான் வாரம் ரெண்டு வகுப்பு என்று மாசம் நானூறு ரூபாய் அழுகிறோமா என்று நினைத்தேன், அருண் நரசிம்மன் எழுதி இருப்பதைப் படிக்கிறபோது இது கலை மட்டும் இல்லை, கணிதமும்கூட என்று ஒருவாறு மேலோட்டமாக விளங்குகிறது.

ஒரு விஷயம்: தேவையில்லாத கேள்வி என்று தோன்றலாம்- எல்லாரும் இதில் தேர்ச்சி பெற்று கச்சேரி செய்து கை தட்டல் பெறப் போவதில்லை. நாம் இதை எல்லாம் எதற்குப் படிக்க வேண்டும்?

என்னைப் பொறுத்தவரை ஒரே பதில்தான்: இதைப் படித்துவிட்டு சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாட்டைக் கேட்கும்போது என் கவனம் திரையில் மட்டும் இல்லை. இத்தனை நாட்கள் எனக்கு ஆட்டத்திற்கு எதுவாக ஏதோ சத்தம் என்ற அளவில்தான் பாட்டு இருந்தது. இப்போது அது தனி வடிவம் பெறுகிறது- சொல்லப் போனால், இது போன்ற விஷயங்களைப் படிப்பது ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது.

இது தொடர்பாக இன்னொன்று- அண்மையில் மலேஷியா வாசுதேவன் பற்றி ஒரு கட்டுரை படித்தேன். என் சகோதரன் ஒருவன் அந்தக் காலத்திலேயே மலேஷியா வாசுதேவனின் ரசிகன். நாங்கள் எஸ்பிபி, ஜேசுதாசைத்  தாண்டியதில்லை- ஓரிருவர் ஜெயச்சந்திரனைப் பாராட்டி இருக்கலாம். எல்லாருமாய் சேர்ந்து அவனைக் கண்டபடிக்குக் கிண்டல் பண்ணுவோம். இப்போது ஷாஜி எழுதி இருக்கிறதைப் படிக்கும்போதுதான் எங்களுக்கு ரசனை போதாது என்றுத் தெரிகிறது.

சில பேருக்குப் பிறக்கும்போதே இந்த விஷயங்கள் கைவந்து விடுகின்றன, என்னைப் போன்ற பலருக்கும் சுட்டிக் காட்டி சொல்லிக் கொடுத்தால்தான் புரியும். அந்த வகையில் அருண் நரசிம்மனின் கட்டுரை தேவையான ஒன்றே. இனி எனக்கு தாளம் என்பது எதையோ தட்டுகிற சத்தமாக மட்டும் இருக்கப் போவதில்லை.

நிறைய காணொளிகளோடு சிறப்பாக இந்த இதழில் இவரது கட்டுரை வந்திருக்கிறது: நான் முன்னமேயே சொன்ன மாதிரி இது ஆடியோ புக்காக வர வேண்டியது: அவரது குரல், தொனி எல்லாம் சூப்பராக செட் ஆகிறது. காணொளி தருவதென்றால் அதிகப் பிரசங்கித்தனமாக ஒரு ஐடியா- இதுவரை எது அதிகப்பிரசங்கித்தனமாக சொல்லவில்லை என்கிறீர்களா? அது வேறு கதை.

என் ஐடியா என்னவென்றால் காணொளிகளில் அவருக்கு பக்க வாத்தியங்கள் தேவை: சூட்டிகையாக, சீக்கிரம் கற்றுக் கொள்கிற ஒரு சிறுமி,  ஒரு முட்டாள் மச்சினன் டைப் யுவன்: இருவருக்கும் ஒருசேர இவர் கற்றுத் தருகிற மாதிரி ஒரு காணொளி கிடைத்தால் பார்க்க விறுவிறுப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.



சுஜாதா தேசிகனின் கை நிறைய காண்டம்  படித்ததும் எனக்கு கொரியாவில் கைது செய்யப்பட்ட இந்தியா மாலுமிகளின் நினைவு வந்தது. உலகளாவிய வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், இது போன்ற விரிவடையும் சுதந்திரங்கள் நம்மை கொரியா போன்ற அச்சுறுத்தல் நிலைகளுக்கும் ஆளாக்குகின்றது என்பது ஒரு கசப்பான உண்மை.
நான்கு மணிக்கு அலுவலகத்திலிருந்து புறப்படும் சமயம், எங்கள் டீம் உறுப்பினர் ஒவ்வொருவர் பின்புறமும் நாற்காலி போட்டுக்கொண்டு ஒருவர் என்று வந்து உட்கார்ந்துக்கொண்டார்கள். என்ன என்று விசாரித்ததில், “நாங்கள் ஹோட்டலுக்குப் போய்விடாமல் இருக்க இவர்கள் காவல்!” என்றார். கொத்தடிமைகளை கொரியாவிலிருந்து எப்படி மீட்பது என்று புரியாமல் விழித்தேன்.
துவாரபாலகர்கள் பொழுதுபோகாமல், கையில் வீடியோ கேம், அல்லது அக்குபஞ்சர் பந்தை வைத்துக்கொண்டு அழுத்திக்கொண்டு இருந்தார்கள். காலை 6 மணிக்கு எல்லோரையும் காரில் ஏற்றிக்கொண்டு ஹோட்டலில் விட்டுவிட்டு குளித்து முடித்தபின் காலை எட்டரை மணிக்கு வந்து கதவைத் தட்டி திரும்ப அலுவலகத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.
அப்புறம் என்ன நடந்தது என்பதை இந்தச் சுட்டியைத் தட்டித் தெரிந்து கொள்ளவும்.  அத்தோடு, கை நிறைய காண்டம் எங்கே எப்படி கிடைக்கிறது என்பது குறித்த மேல்விவரங்களும் உங்கள் பார்வைக்குக் காத்திருக்கிறது.


இது இந்த இதழ் குறித்த என் கடைசி சுட்டி- வெடித்து கிளம்பும் விக்கிலீக்ஸ். ஏராளமான பரபரப்புத் தகவல்கள் இந்தக் கட்டுரையில் இருக்கின்றன: இது ஒரு தொடராக வரப் போகிறது என்று தெரிகிறது: தலைப்பு விக்கிலீக்ஸ் பற்றி இருந்தாலும் எனக்கு தகவலாக இருந்தது இதுதான்-
"ஜார்க்கண்டில் இந்தியப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி 80 காவலர்களைக் கொன்ற கொடூரமான நிகழ்ச்சி நடப்பதற்கு சில நாட்கள் கழித்து கனடாவில் இருந்து இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு தகவல் வந்தது. அந்த தகவலைப் பற்றி இந்திய ஊடகங்கள் எவையும் மூச்சு விட்டதாக நினைவில் இல்லை. இந்தியாவையே உலுக்கி புரட்டிப் போட்டிருக்க வேண்டிய பூகம்பம் போலான அதி முக்கியமான இந்தியாவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் ஒரு தகவல் அது. அமெரிக்காவிலும், கனடாவிலும் அரசாங்க ரகசியங்களைக் களவு செய்யும் சைபர் கொள்ளையர்களைக் கண்காணிப்பதற்காக ஒரு சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்பு கனடாவின் மன்க் ஸ்கூல் ஆஃப் க்ளோபல் அஃபேர்ஸ் என்ற டொராண்டோ பல்கலைக்கழகத்துறையில் இருந்து இந்திய உளவுத் துறைக்கு அனுப்பியதே அந்த அதிர்ச்சிகரமான தகவல்.
இந்தியாவின் அதி முக்கியமான ராணுவம், வெளியுறவு, உள்நாட்டு ஆவணங்களும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தால் மிக மிக ரகசியம் என்று எச்சரிக்கை செய்யப்பட்ட பல்வேறு ஆவணங்களும், இந்தியா ஆப்கானிஸ்தானில் செய்து வரும் வேலைகள் பற்றிய தகவல்களும், இந்திய தூதர்கள், ஒற்றர்கள் பற்றிய தகவல்களும் ஒன்று விடாமல் களவாடப்பட்ட விபரத்தை அந்த ஆராய்ச்சி அமைப்பினர் இந்தியாவுக்குத் தெரிவித்தனர்."
காலப்போக்கில் ரகசியமே இருக்கக் கூடாது என்பது நடைமுறையாகி விடும் என்றுத் தோன்றுகிறது: ஒரு காலத்தில் அணு ஆயுதம் வல்லரசுகளுக்கு இடையில் சமன்பாடு உண்டாக்கியதேன்றால் இப்போது தொலை தொடர்பு திறன்.

அதில் நம் நாடு வீக்காக இருப்பது கவலைக்குரிய விஷயம்- அடுத்த தடவை போர் என்று வந்தால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் போவது ஆயுதங்களல்ல, தகவல்கள்தான்.

ஜியார்ஜியாவுடனான போரில் ரஷ்யா ஜியார்ஜியாவின் கணினிகளை முடக்கியதாக இருக்கிறக் குற்றச்சாட்டுகள் கவனத்துக்குரியவை.  இது தொடர்பான அருமையான கட்டுரை எகானமிஸ்ட் பத்திரிக்கையில் இருக்கிறது.


இத இதழில் வெளியான பதினைந்து படைப்புகில் ஒன்பது குறித்து என் கருத்தை எழுதி விட்டேன். பொதுவாக நிறைகள் இருக்கும் இடத்தில்தான் குறை காண வேண்டும் என்பதை ஒரு கோட்பாடாக வைத்திருக்கிறேன் :)

நான் முன்வைக்கிற குறைகளும் அந்த எண்ணத்தில் முன் வைக்கப்பட்டனவே. எங்காவது நிறைகளே காணாமல் போகும் அளவுக்கு குறைகளைப் பற்றிப் பேசி இருந்தால் மன்னிக்கவும்- அது என் நோக்கமல்ல.