Contact/ தொடர்பு கொள்க

சொல்வனம் முப்பத்தொன்று - 1

போன தடவை எழுதும்போது பத்ரி அவர்கள் பாகிஸ்தானுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சொன்னதை கொள்கை அளவில் ஆதரித்து எழுதினேன். இப்போது அருணகிரி அவர்கள் அதற்கு எதிர்வினை ஆற்றிவிட்ட நிலையில் எப்படி எதிர் அணிக்குத்  தாவலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பாகிஸ்தான் உடம்பெங்கும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு வத்திப்பட்டியை உரசி  விளையாட்டு காட்டுகிற வீட்டுக்கு அடங்காத பெண். "எல்லாம் காஸ்தானே, மண்ணெண்ணெய் அங்கே கிடைக்கிறதா?" என்று கேட்பவர்களுக்கு- ஆமாம் ஐயா, சிலிண்டரைத் திறந்து வைத்துக் கொண்டு, "அடுப்பைப் பற்ற வைக்கப் போகிறேன், அதற்குள் என்னைக்  கட்டிப் புடிடா! கட்டிப் புடிடா!" என்று மல்லுக் கட்டுகிற ராட்சச மனைவி என்று சொல்கிறேன். சனியனோடு வாழவும் முடியாது வெட்டி விடவும் முடியாது.

பத்ரி வாழ வழி சொல்கிறார்- அருணகிரி, வெட்டிக் கொண்டு விடலாம் என்று சொல்கிறார்.
"சிதிலமடைந்த கூடு தேசமாய் ஆகி வருகிறது பாகிஸ்தான். சிந்து, பஞ்சாப், பலுசிஸ்தானம், வடமேற்கு என ஏகப்பட்ட உள்ளுறைப்பூசல்களைக் கொண்ட நாடு அது. பிரச்சினை கைக்கடங்காமல் போனால் மேற்கு நாடுகள் அதனைக் கூறு போடவும் தயங்காது. ஆனால் திறனின்றித் தோற்றவன் கண்டுபிடிக்கும் நொண்டிச்சாக்கு போல, அதற்கான பழியையும் பாகிஸ்தான் இந்தியாவின் மீதே சுமத்தும். பாகிஸ்தானை நேர்வழிப்படுத்தவே முடியாதா என்றால் அதற்கான விடை, அது இந்தியாவின் கையில் கிடையாது, அது இந்தியாவின் வேலையும் கிடையாது என்பதே."
 சண்டை என்று வந்தால் இப்படி எல்லாம் ஏச வேண்டியதுதான்- ஆனால் தீர்வு என்று தேடும்போது நாம் பாகிஸ்தானை அடிக்கிற மாதிரி அடித்துக் கொண்டு, மொத்தத்தில்  அணைத்துக் கொண்டு போவதைத் தவிர வேறு வழி இல்லை என்றுதான் தோன்றுகிறது. 

அவர்களுக்குப் போர் என்று வந்தால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் கிடையாது- இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நமக்கு? அது பாகிஸ்தானுக்கும் தெரியும்- அதனால் படுக்கை அறையில் ஒரு பேச்சு, நம்ம வீடு மனுஷர்கள் நாலு பேர் நம் வீட்டுக்கு வரும் நன்னாள் அன்று வரவேற்பு  அறையில் வேறு பேச்சு என்று அதன் முரண்போக்கு தொடரவே செய்யும். 

என்ன செய்வது? இந்தியாவும் பாகிஸ்தானும் சொத்து பிரித்துக் கொண்டு சேர்ந்து வாழும் பார்ட்னர்கள்  மாதிரி: ஒருத்தருக்கு இவ்வளவு கொடுத்தும் முதுகை விட்டு இறங்க  மாட்டேன் என்கிறானே என்ற கடுப்பு, இன்னொருத்தனுக்கு இவனை விட்டால் எனக்கு ஆளே இல்லையா, நான் எவ்வளவு பெரிய ஆள் பார் என்று வாழ்ந்து காட்ட வேண்டிய  நிர்பந்தம். 

அதற்கு பாகிஸ்தான் தேர்ந்தெடுத்த வழி, "நான் செத்தால் நீ காலி!" என்ற மிரட்டல்.

அது எல்லாம் இருக்கட்டும்- அருணகிரி பத்ரியிடம்  பாயிண்ட் பாயிண்டாக கேட்டிருக்கிறத் தப்பாட்டப் பாட்டுக்கு அவரால் பதில் பாட்டு போட முடியாது என்று தோன்றுகிறது-  அதிலும் இந்த மாதிரி கேட்டால் எப்படி பதில் சொல்வது? அவர் தன் சிலபல பதிவுகளைத் திருத்தி எழுதிவிட்டுதான் ஆககூடி இன்னொரு எதிர்வினை செய்ய முடியும்!
நாட்டின் வளம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் புத்தகக் கடை போட்டு மடிக்கணிணி பறிகொடுத்த கதையாகி விடும். நோய்க்கூறு மனநிலை இருப்பவர்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் முன் -யோசனையும் தெளிவும் முதலில் இருக்க வேண்டும். பறிகொடுத்தபின் புலம்ப தேசமும் சுதந்திரமும் கடைச்சரக்கல்ல.
பெல்ட்டுக்குக் கீழ எல்லாம் அடிக்கக்கூடாதுங்ணா!

என்னைக் கேட்டால் அருணகிரி ஒரு கோணத்தை விவாதித்திருக்க வேண்டும்- பாகிஸ்தானில் அரசியல், சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளைப் பெருமளவில்  கையில் வைத்திருக்கிறவர்கள் பொது மக்கள் அல்ல: நீங்கள் நினைத்த மாதிரியே  உயர் ராணுவ அதிகாரிகள்தான். எந்த அளவுக்கு என்று ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுவோம்! அதை யாராவது எதிர்வினை செய்யலாமே? அந்தக் கோணத்தைப் பார்க்காமல் பாகிஸ்தான் ஏன் சாவை நோக்கிப் பயணிக்கிறது, அது ஏன் அமைதியை நோக்கி அடியெடுத்து வைக்க மறுக்கிறது, எப்படிப்பட்ட வர்த்தக உறவை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை எல்லாம்  பேச முடியாது என்பது அடியேனின் எண்ணம்.

"சொல்வனத்தில் நாஞ்சில் நாடன் எழுதுகிறார்"- இப்படி ஒரு பேனரே வைக்கலாம். இந்த இதழில் புத்தகத் தலைப்புகளைப் பற்றி எழுதி இருக்கிறார். நானாயிருந்தால் ஒரு பெரிய லிஸ்ட் போட்டு ஒவ்வொரு புத்தகத்துக்கு மூன்று வரிகள் என்று அட்டவணைப் பதிவு செய்திருப்பேன். அவ்வளவுதான் நம்மால் முடியும்.

பல்லாண்டு காலமாகப் புத்தகங்களையும் நாடகங்களையும் திரைப்படங்களையும் தேடித் தேடிப் படித்த வாழ்க்கை  நாஞ்சில் நாடனின் இந்தக் கட்டுரையாக வடிவம் பெற்றிருக்கிறது- வெறும் தகவலாக இல்லாமல் உயிரோட்டமுள்ள ஒரு விஷயமாக  எப்படி எழுதுவது என்பது இந்த மாதிரி எழுத்தைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீளமாக இருந்தாலும் மலையாளத்தில் அற்புதமாய்த் தலைப்பு வைப்பார்கள், சிறுகதை, நாவல், நாடகத்துக்கு. பி.கெ.பாலகிருஷ்ண பிள்ளை எழுதிய ‘இனி ஞான் உறங்கட்டெ?’ எனும் நாவலை சாகித்ய அகாதமிக்காகத் தமிழாக்கம் செய்த, தமிழின் அற்புதமான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவரான ஆ.மாதவன் பட்டபாடு எனக்குத் தெரியும். பாரதப்போர் முடிந்த பிறகு, வெஞ்சினம் ஈடேறி வெற்றிக் கனிக்குப் பிந்தைய விரக்தி, உபபாண்டவர் மரணம் ஈந்த சோகம், அலுப்பு, களைப்பு, சோர்வு யாவும் தொனிக்க திரெளபதி கேட்பதானது அந்தத் தலைப்பு. கெஞ்சல் தொனியுடனும் விடுபட முயன்றும், ‘இனி ஞான் உறங்கட்டெ?’. திரெளபதியின் உறக்கம் எனத் தொடங்கி, தொடர்ந்து பல தலைப்புகள் பரிசீலித்து, ‘இனி ஞான் உறங்கட்டும்’ என்று நிலைத்தார் ஆ.மாதவன். எனக்கும் அதில் கொஞ்சம் பங்குண்டு. ஆனால் இருவருக்குமே நிறைவில்லாத தலைப்பு. யோசித்து, மேலும் பொருத்தமாக ஒரு தலைப்புச் சொல்லுங்கள், ஒரு சவால் எனக்கொண்டு.
உலகத்து நாடகங்களில் பல, கருத்தாழம் மிக்க தலைப்புகள் கொண்டவை. உங்களுக்கு நினைவிருக்கும் மலையாளத்து தோப்பில் பாசி நாடகத் தலைப்பு ‘நிங்ஙள் என்ன கம்மூனிஸ்ட் ஆக்கி’. வேறொரு மலையாள நாடகத் தலைப்பு ‘கிறிஸ்துவின்ட ஆறாம் திருமுறிவு’. கிறிஸ்துவை சிலுவையில் அறையும்போது ஆணியடித்து ஆழமான காயங்கள் ஏற்படுத்திய இடங்கள் ஐந்து. அந்த நாடகம் ஆறாவது ஆணி பற்றிக் குறிப்புணர்த்துவது. முறிவு எனில் காயம், திரு என்பது சிறப்பு அடைமொழி.
பரபரப்பாக அந்தக் காலத்தில் பேசப்பட்ட பஞ்சாபி நாடகங்களின் தலைப்புகளே நகைச்சுவையுடன் இருந்தன. ‘சடீ புட்டேனு ஜவானி’ எனும் நாடகத் தலைப்பின் தமிழ்ப் பெயர்ப்பு என்றால் ‘கிழவனுக்கு வாலிபம் ஏறிவிட்டது’ எனலாம். இன்னொரு தலைப்பு, ‘ஸாலி ஆதே கர்வாலி’. தமிழில், ‘மைத்துனி பாதி வீட்டுகாரி’ எனலாம். எங்கள் ஊரில் ஒரு சொலவம் உண்டு. ‘அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி’ என்று. அதுபோல.
எத்தனை தடவை வேண்டுமானாலும் இந்தக் கட்டுரையைப் படிக்கலாம்: அவ்வளவு  சரக்கு இருக்கிறது இதில்.


"தலைசீவாத கதாநாயகன், அவனுக்கென்று வேலை எதுவும் இருக்காது; கால் சட்டை தெரியும் அளவுக்கு உயர்த்திக்கட்டப்பட்டுள்ள கைலியும் வாயில் புகையும் பீடியும் தான் இன்றைய தமிழ் இளைஞர்களின் அடையாளம் என்று சொல்கிறது தமிழ் சினிமா. கதாநாயகிக்கு காதலிக்கவும் செத்துபோகவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் பேச தெரியக்கூடாது எனபது எழுதப்படாத விதி. ஆனால் தமிழ் கிராமத்து பெண்களே மறந்துவிட்ட தாவணியை உடலில் சுற்றிக்கொண்டு கதாநாயகன் போகும் வழியில் குறுக்கேயும் மறுக்கேயும் போய் அவனைக் கண் சிமிட்டாமல் சைட் அடிக்க தெரிந்திருக்க வேண்டும். கதாநாயகன் வாயெல்லாம் பல்லாக தலையை ஆட்டிக்கொண்டே நிற்க வேண்டும். கடந்த மூன்றாண்டுகளாக வரும் தமிழ் படங்களை பார்த்திருப்பவர்கள் கவனித்திருக்கலாம். இப்படிப்பட்ட ‘யதார்த்தத்தை’த்தான் முன்வைக்கிறது இன்றைய தமிழ் சினிமா."
 என்று எழுதுகிற வெ. சந்திரமோகன் தமிழ் சினிமாவை ஏகத்துக்கும் தாக்கி இருக்கிறார்- கூடவே நமக்கெல்லாமும் பாட்டு கிடைக்கிறது.
"‘சின்ன தம்பியில்’ ரஜினி படம் பார்க்கும் கவுண்டமணி தான் நினைவுக்கு வருகிறார். ஒரு வயதானவரை ‘சைடு வில்லன்’ தள்ளி விட்டதும் கூட்டம் பதறிப்போக கவுண்டர் மட்டும் கை தட்டுவார். அவருக்காவது படத்தில் கண் தெரியாது. நம் மக்களுக்கு சினிமா என்றாலே என்ன என்று தெரியவில்லை."
நானும் ஓவராத்தான் திட்டி இருக்காருன்னு நினைக்கிறேன். ஆனால் அண்மையில் வெளி வந்து பல தரப்பினரிடையும் பாராட்டு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் களவாணி குறித்து இவர் எழுதி இருக்கும் இந்தக் கட்டுரையில் நியாயங்கள் இல்லாமல் இல்லை. 

நானறிந்தவரை கேபிள் ஷங்கருக்கு அடுத்தபடி இவர் ஒருவர்தான் களவாணியை சராசரி படமாகப் பார்த்திருக்கிறார். அந்த ஒரிஜினாலிட்டிக்காகவே இருவரையும் பாராட்டலாம். 

கான் திரைப்பட விழாவில் முதல் பரிசு பெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படத்துக்கு யூட்யூப் சுட்டி தந்திருக்கிறார்கள்.ஒரு நிமிட அளவு கூட ஓடுவதில்லை இந்த படம்- ஒரு வசனம்கூட இல்லை. இசை, காட்சிகள் வாயிலாக உன்னதமான ஒரு உணர்வுக்கு நம்மை ஆளாக்குகிறது இந்தப்  படம்.

நம்ம ஊரில் ஏன் இப்படி எடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று கேட்க மாட்டேன்- எல்லாவற்றையும் நாமே செய்து விட்டால் அப்புறம் மற்றவர்கள் எல்லாம் என்ன செய்வதாம்? பிழைத்துப்  போகட்டும், விடுங்கள். 

திரைப்படங்கள் குறித்துப் பேச வந்தாச்சு. ரவி நடராஜன் இரு பரிமாண அனிமேஷன் படங்கள் குறித்து டெக்னிகலாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் நான் படித்த ஒரு ஆச்சரியப்படும் விஷயம்:
 "அந்நாளைய இரு பரிமாண அனிமேஷன் திரைப்படங்களில் கூர்ந்து கவனித்தால் சில விஷயங்கள் சுவாரசியமாக இருக்கும். அதிகம் ஜூம் (zoom) காட்சிகள் இருக்காது. பான் (Pan) காட்சிகளே இருக்கும்....
...ஒரு இடத்தில் தொடங்கி காட்சியை பதிவு செய்து, அதே மட்ட நிலையில் இடதோ அல்லது வலது பக்கத்திற்குகோ காமிராவை நகர்த்திய வண்ணம் காட்சிகளை பதிவு செய்கிறார்கள். இது ‘பான் ஷாட்’ என்று சொல்லப்படும். மலைமீதிருந்து தூரத்தில் ஒரு ஏரி தெரிகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்படி வீடியோ எடுப்பீர்கள்? தூரத்தில் உள்ள ஏரியை காட்சியாக படம்பிடித்து மெதுவாக ஜூம் செய்வீர்கள். அதாவது, பார்ப்பதற்கு, ஏரி அருகே வருவது போல காட்சியளிக்கும். ஏரி அருகே உள்ள ஒரு மலரை பதிவு செய்து உங்கள் உள்ளிருக்கும் பாலு மகேந்திராவை உங்கள் நண்பர்களிடம் காட்டுவதில்தான் எத்தனை மகிழ்ச்சி!"
இதை ஏன் அனிமேஷனில் செய்ய அந்த காலத்தில் கஷ்டப்பட்டார்கள்? அந்த விவரம் படிப்பதற்கே சுவையாக இருக்கிறது- மனசைக் கொஞ்சம் டெக்னிக்கலா மாற்றிக் கொண்டு ரவி நடராஜனின் கட்டுரையைப் படிக்க இங்கே போங்க- "அனிமேஷன் திரைப்பயணம்: 02 - இரு பரிமாண உலகம்"