Contact/ தொடர்பு கொள்க

சொல்வனம் முப்பத்தொன்று - 2

நான் ஒன்றும் பெரிய யோக்கியன் இல்லை.

எந்த நேரத்தில் ராமன் ராஜா நன்றாக எழுதுகிறார், சக்கை போடு போடுகிறார், style wins over substance - என்றெல்லாம் சொன்னேனோ, இந்த சொல்வனத்தில் சொதப்பி விட்டார். இதை சொல்லக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்ன செய்வது? எனது நண்பர் ஒருவர், இதைப் பற்றியெல்லாம் எழுத மாட்டீர்களா என்று கேட்ட பின்னும் நேரமில்லை அது இது என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இவரை மாதிரி நண்பர்கள் இருக்கிற வரை என்னால் மனசாட்சியை மூட்டை கட்டி வைத்துவிட்டு நிம்மதியாய் இருக்க முடியாது. நீங்க நல்லா இருங்க ஐயா!

ராமன் ராஜா DSM மீது பல நியாயமான குற்றங்களைக் கூறி இருக்கலாம். ஆனால் DSMஇல் நோய்களை வகை பிரித்து பேர் சூட்டி இருப்பதே மருத்துவ நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் என்று சொல்லியிருப்பது ரொம்ப ஓவர். இது தீவிர இடதுசாரி அல்லது வலதுசாரி என்று ஏதோ ஒரு சாரியில் போகிறப் பத்திரிக்கையில் வந்திருந்தால் தனியாகத் தெரிந்திருக்காது: ஆனால் பன்முகப் பார்வைகளை வழங்குகிற  சொல்வனத்தில் பொருத்தமில்லாமல் தனியாகத் தெரிகிறது.

இந்த விஷயத்தைப் பேசும்போது இன்னொரு குறையும் சொல்லத் தோன்றுகிறது: கட்டுரைகளை எழுதுகிறவர்கள் கூடுமானவரை சுட்டிகளைத் தர வேண்டும். புத்தகம் என்றால் பெயர் மற்றும் பக்க எண்கள், வலையில் கிட்டுகிறதென்றால் உரலி. அதுதானே நியாயம்? ராமன் ராஜா நிறைய குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டே போகிறார், ஆனால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவைகள் சொல்லப்படுகின்றன என்பதை உணர்த்த ஒரு சுட்டி கூட இல்லை. ஒரு அறிமுகக் கட்டுரை, நகைச்சுவை கட்டுரை என்றால் பரவாயில்லை- தலையங்கத்துக்கு ஒப்பான கனமுடைய விஷயத்தை எழுதும்போது சுட்டிகளை நிராகரிப்பது அவ்வளவு சரியாகத் தெரியவில்லை.

DSM குறித்து மேற்கத்திய நாடுகளிலேயே தீவிரமாக விவாதிக்கிறார்கள்: சில சுட்டிகள்:
ராமன் ராஜா ADHD மற்றும் அநியாயத்துக்கு நோய்களை வரையறுத்து மருந்து தருவது குறித்துத் தெரிவித்த கருத்துகளை ஒத்த சுட்டி இங்கே.  இது தவிர ஏறத்தாழ எல்லாரையுமே மனநோயாளிகள் என்று சொல்கிற வகையில் DSM வரையறை செய்கிறது என்று சொல்பவர்கள் இங்கே, இங்கே, இங்கே. இது போல் இன்னம் பல தரலாம் உதாரணத்துக்கு  இங்கேயும் ஒன்று. இதன் அபத்தங்கள் இங்கே.

இப்படி சுட்டி தருவதால் இண்டர்நெட்டைப் பார்த்து கட் அண்ட் பேஸ்ட் செய்கிறான் என்று சொல்வார்கள்- சொல்லுபவர்கள் சொல்லிக்கொண்டு போகட்டும். ஆங்கிலத்தில் எழுதுகிறவர்கள், விஞ்ஞானிகள்கூட, சுட்டி தரத் தயங்குவதில்லை. சுட்டிகள் தருவது நம் வாதத்துக்கு வலு சேர்க்கிறது என்று நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை அமெரிக்க DSM நமக்குப் பொருந்தாது என்று நான் சொல்வதானால் இதுதான் காரணமாக இருக்கும்.

ராமன் ராஜாவின் கட்டுரைக்கு எதிராக இன்னொரு விஷயத்தை சொல்லலாம்- அவர் ரொம்ப எளிமைப்படுத்தி இருக்கிறார் என்று- என் நண்பரின் குற்றச்சாட்டு, குறிப்பாக இது குறித்தே-
"DSM என்பது உலகம் முழுவதும் பரவலாக மருத்துவர்கள், மருந்துக் கம்பெனிகள், ஆராய்ச்சியாளர்கள் உபயோகிக்கும் கையேடு. சென்ற முறை இதில் குழந்தைகளின் புதிய வியாதியாக ADHD - அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர் ஆக்டிவிடி டிஸார்டர் - என்று ஒன்றைச் சேர்த்தார்கள். தம்பிப் பாப்பாவை அம்மா தூக்கிக் கொஞ்சும்போது அண்ணன்காரன் பொறாமையில் அழுது அடம் பிடிக்கிறானே, அதற்குத்தான் இப்படி ஒரு திகிலூட்டும் வியாதிப் பெயர். 
இதைப் படித்துவிட்டுப் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ADHD வந்துவிட்டது என்று பதறிப் போய் டாக்டரிடம் ஓடினார்கள். ஒரு கால கட்டத்தில் ADHD என்பது தொற்று வியாதியாகவே ஊர் ஊராகப் பரவியது. 
அடுத்து அமெரிக்க டாக்டர்கள் செய்ததை ……த்தனம் என்றே வர்ணிக்கலாம். குழந்தைகளின் ‘நரம்புகளை அமைதிப் படுத்துவதற்காக’ ரிட்டாலின், அட்டெரால், வைவென்ஸே போன்ற தீவிரமான மருந்துகளை, மை தீரும் வரை பிரிஸ்கிரிப்ஷன் எழுதித் தள்ளிவிட்டார்கள்! 2008-ம் ஆண்டில் இந்த மருந்துகள் அமெரிக்காவில் 480 கோடி டாலருக்கு விற்பனை ஆகியிருக்கின்றன. அமெரிக்கக் குழந்தைகள் மட்டுமே விழுங்கிய ரிட்டாலினைக் கணக்கெடுத்துப் பார்த்தால் உலகத்தின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் வசிக்கும் எல்லா மனிதர்களும் விழுங்கியதைப் போல் ஐந்து மடங்கு. 
இந்த மருந்துகளுக்கெல்லாம் மிக மிக ஆபத்தான பக்க விளைவுகள் இருக்கின்றன. ரிட்டாலினின் பக்க விளைவுகள் என்பதை விக்கி பீடியாவில் பார்த்தால் A முதல் X வரை சரம் சரமாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அட்டெரால் என்பது போதை மருந்துகளின் காக்டெயில்! இதையே யாராவது ரோட்டில் வைத்து விற்றால் கஞ்சா கேஸில் போலீஸ் பிடித்துப் போய்விடும். அதை ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ‘அடம் பிடிக்கும் வியாதி’க்காகக் கொடுத்திருக்கிறார்கள். வைவன்ஸே சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்ட குழந்தைகள் உண்டு"
இது மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம்- நம்மைப் போன்ற பொது மக்கள், இந்த மருந்து மாத்திரைகளின் பயனாளர்கள் இப்படி பேசவும் செய்கிறார்கள். ADHD என்றொரு பிரச்சினை இல்லை என்று சாதிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இதன் அடிப்படை, நோய்க்கூறுகள் நம்பத்தகுந்தனவாக இருப்பினும் இல்லாவிட்டாலும், இந்த மாத்திரைகளை சாப்பிட்ட குழந்தைகளில் பலர் நன்றாகவே இருக்கிறார்கள்.

நான்கூட, இப்படிப்பட்ட பிள்ளைகளைதான் நாம் மக்கு என்று படிக்கும் காலத்தில் ஒதுக்கி வைத்தோம் என்று நினைத்ததுண்டு. ADHDக்கு மருந்து சாப்பிடுகிற குழந்தைகள் அதனால் பயனடைவது கண்கூடான ஒன்று. இதை எந்த மனநல மருத்துவரைக் கேட்டாலும் சொல்வார்கள்.

இந்த விஷயத்தில் அநியாயத்துக்கு அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லியிருக்க வேண்டாம், அதன் பயன்களை நோக்காமல் ஒரேயடியாக பயம் காட்டி இருக்க வேண்டாம்: ஒருதலைபட்சமாக எழுதி இருப்பது சரியாகத் தோன்றவில்லை. மருந்துக் கம்பெனிகளின் கையாளாக DSM மாறி விட்டது என்பது போன்ற தொனி அவசியமில்லாத ஒன்று, அவ்வளவு நியாயமில்லாத ஒன்றும் கூட. முன்னமேயே சொன்னதுபோல் இது தீவிர சாரிப் பத்திரிக்கைகளுக்கு மட்டுமே உரிய பார்வை: தன் கருத்துகளுக்கு எதிர் தரப்பு இருக்கக்கூடும் என்பது குறித்த ஒரு வார்த்தைகூட  இல்லாமல் இது எழுதப்பட்டிருப்பது ஒரு பெரிய பின்னடைவு.

ஆனால் ஒன்று: இதை ராமன் ராஜா சிறப்பாக, சுவையாக, அழகாக எழுதி இருக்கிறார். நிச்சயம் படிக்கலாம். படித்தால் நீங்களே அவர் சொன்னதை பெருமளவுக்கு நம்புவீர்கள் என்று நினைக்கிறேன்.

என் தலைவிதி. நேற்று சொன்னதை இன்று தவறென்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது. Style wins over substance என்று நான் சொன்னது முட்டாள்தனம். சாரம் இருக்க வேண்டும் சாமி, அது இல்லாமல் எழுப்பப்படுகிற கட்டிடத்துக்கு சீட்டுக்கட்டு மாளிகைக்கு இருக்கிற பலம்தான் இருக்கும். எவ்வளவுதான் அழகாக, ரசிக்கும்படியாக இருந்தாலும், கண்டவனும் சுலபமாக அதன் கட்டுமானங்களை உடைத்து விட்டுப் போய் விடுவான்.

இந்த இடத்தில் என் மனசாட்சியின் தூக்கத்தைக் கெடுத்துத் தொலைத்த அந்த நண்பரின் சொற்களைத் தருவதே பொருத்தமாக இருக்கும்:
"நீங்கள் உங்களுக்குப்பட்டதை எழுதுங்கள். அது உங்கள் கருத்து.ஓ இப்படியும் யோசிக்கலாமே என்று பார்வை கொஞ்சம் மேம்படும். அதில் மனவருத்தப்பட என்ன இருக்கிறது.
நீங்கள் குறைநிறைகளை எழுதவேண்டும் அப்பொழுதுதானே எழுதுபவர்கள் வளர முடியும்.மரணமொக்கை சொல்வனம் விமர்சனப்பக்கமல்லவா? நியாயம் அனியாயத்தைவிட, தரவுகளையே தவறாகத்தந்தால் அதைச்சுட்டிக்காட்டலாமா?"
ஒருவன் செய்யக் கூடிய தவறுகளிலேயே பெரிய தவறு தெரிந்தே செய்யும் தவறு.  சரியான சமயத்தில் அதை சுட்டிக் காட்டி என்னைத் திருத்திய திரு நண்பர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.





இந்த இதழில் வந்திருக்கிற ராகம் தானம் பல்லவி மிகவும் சுவையான ஒன்று. மேற்காணும் சுட்டி கச்சேரிகளில் எப்படி தாளம் போட வேண்டும் என்பதன் செயல்முறை விளக்கம். எளிய அறிமுகம், ஆனால் இனிய என்று சொல்ல முடியாது- அருண் நரசிம்மனின் குரலைக் கேட்டால் தாளம் தப்பினால் ஸ்கேலால் முட்டியில் தாளவாத்தியக் கச்சேரி நடத்தி விடுவாரோ  என்ற பயம் வருகிறது.

இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது கர்நாடக இசையின் கட்டுமானங்கள் ஒரு கணித சமன்பாட்டைப் போல எவ்வளவு நளினமாக, காம்ப்லாக்சாகக் கட்டப்பட்டிருக்கின்றன என்பது ஒருவாறு தெரிகிறது. அவர் தான் எழுதி இருப்பது அடிப்படை விஷயம்தான் என்று சொல்லிக் கொள்கிறார்- ஆனால் அதனுள் அடங்கி இருப்பது ஏராளம். என் மகனும் மிருதங்கம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறான்: அவன் தனது நோட்டுப் புத்தகத்தில் "தொம் தொம் கிட தக தக தரி கிட தா!" என்று ஏதோ டான்ஸ் மாஸ்டர் கணக்காக எழுதி வைத்திருக்கிறானே, இதற்குத்தான் வாரம் ரெண்டு வகுப்பு என்று மாசம் நானூறு ரூபாய் அழுகிறோமா என்று நினைத்தேன், அருண் நரசிம்மன் எழுதி இருப்பதைப் படிக்கிறபோது இது கலை மட்டும் இல்லை, கணிதமும்கூட என்று ஒருவாறு மேலோட்டமாக விளங்குகிறது.

ஒரு விஷயம்: தேவையில்லாத கேள்வி என்று தோன்றலாம்- எல்லாரும் இதில் தேர்ச்சி பெற்று கச்சேரி செய்து கை தட்டல் பெறப் போவதில்லை. நாம் இதை எல்லாம் எதற்குப் படிக்க வேண்டும்?

என்னைப் பொறுத்தவரை ஒரே பதில்தான்: இதைப் படித்துவிட்டு சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாட்டைக் கேட்கும்போது என் கவனம் திரையில் மட்டும் இல்லை. இத்தனை நாட்கள் எனக்கு ஆட்டத்திற்கு எதுவாக ஏதோ சத்தம் என்ற அளவில்தான் பாட்டு இருந்தது. இப்போது அது தனி வடிவம் பெறுகிறது- சொல்லப் போனால், இது போன்ற விஷயங்களைப் படிப்பது ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது.

இது தொடர்பாக இன்னொன்று- அண்மையில் மலேஷியா வாசுதேவன் பற்றி ஒரு கட்டுரை படித்தேன். என் சகோதரன் ஒருவன் அந்தக் காலத்திலேயே மலேஷியா வாசுதேவனின் ரசிகன். நாங்கள் எஸ்பிபி, ஜேசுதாசைத்  தாண்டியதில்லை- ஓரிருவர் ஜெயச்சந்திரனைப் பாராட்டி இருக்கலாம். எல்லாருமாய் சேர்ந்து அவனைக் கண்டபடிக்குக் கிண்டல் பண்ணுவோம். இப்போது ஷாஜி எழுதி இருக்கிறதைப் படிக்கும்போதுதான் எங்களுக்கு ரசனை போதாது என்றுத் தெரிகிறது.

சில பேருக்குப் பிறக்கும்போதே இந்த விஷயங்கள் கைவந்து விடுகின்றன, என்னைப் போன்ற பலருக்கும் சுட்டிக் காட்டி சொல்லிக் கொடுத்தால்தான் புரியும். அந்த வகையில் அருண் நரசிம்மனின் கட்டுரை தேவையான ஒன்றே. இனி எனக்கு தாளம் என்பது எதையோ தட்டுகிற சத்தமாக மட்டும் இருக்கப் போவதில்லை.

நிறைய காணொளிகளோடு சிறப்பாக இந்த இதழில் இவரது கட்டுரை வந்திருக்கிறது: நான் முன்னமேயே சொன்ன மாதிரி இது ஆடியோ புக்காக வர வேண்டியது: அவரது குரல், தொனி எல்லாம் சூப்பராக செட் ஆகிறது. காணொளி தருவதென்றால் அதிகப் பிரசங்கித்தனமாக ஒரு ஐடியா- இதுவரை எது அதிகப்பிரசங்கித்தனமாக சொல்லவில்லை என்கிறீர்களா? அது வேறு கதை.

என் ஐடியா என்னவென்றால் காணொளிகளில் அவருக்கு பக்க வாத்தியங்கள் தேவை: சூட்டிகையாக, சீக்கிரம் கற்றுக் கொள்கிற ஒரு சிறுமி,  ஒரு முட்டாள் மச்சினன் டைப் யுவன்: இருவருக்கும் ஒருசேர இவர் கற்றுத் தருகிற மாதிரி ஒரு காணொளி கிடைத்தால் பார்க்க விறுவிறுப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.



சுஜாதா தேசிகனின் கை நிறைய காண்டம்  படித்ததும் எனக்கு கொரியாவில் கைது செய்யப்பட்ட இந்தியா மாலுமிகளின் நினைவு வந்தது. உலகளாவிய வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், இது போன்ற விரிவடையும் சுதந்திரங்கள் நம்மை கொரியா போன்ற அச்சுறுத்தல் நிலைகளுக்கும் ஆளாக்குகின்றது என்பது ஒரு கசப்பான உண்மை.
நான்கு மணிக்கு அலுவலகத்திலிருந்து புறப்படும் சமயம், எங்கள் டீம் உறுப்பினர் ஒவ்வொருவர் பின்புறமும் நாற்காலி போட்டுக்கொண்டு ஒருவர் என்று வந்து உட்கார்ந்துக்கொண்டார்கள். என்ன என்று விசாரித்ததில், “நாங்கள் ஹோட்டலுக்குப் போய்விடாமல் இருக்க இவர்கள் காவல்!” என்றார். கொத்தடிமைகளை கொரியாவிலிருந்து எப்படி மீட்பது என்று புரியாமல் விழித்தேன்.
துவாரபாலகர்கள் பொழுதுபோகாமல், கையில் வீடியோ கேம், அல்லது அக்குபஞ்சர் பந்தை வைத்துக்கொண்டு அழுத்திக்கொண்டு இருந்தார்கள். காலை 6 மணிக்கு எல்லோரையும் காரில் ஏற்றிக்கொண்டு ஹோட்டலில் விட்டுவிட்டு குளித்து முடித்தபின் காலை எட்டரை மணிக்கு வந்து கதவைத் தட்டி திரும்ப அலுவலகத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.
அப்புறம் என்ன நடந்தது என்பதை இந்தச் சுட்டியைத் தட்டித் தெரிந்து கொள்ளவும்.  அத்தோடு, கை நிறைய காண்டம் எங்கே எப்படி கிடைக்கிறது என்பது குறித்த மேல்விவரங்களும் உங்கள் பார்வைக்குக் காத்திருக்கிறது.


இது இந்த இதழ் குறித்த என் கடைசி சுட்டி- வெடித்து கிளம்பும் விக்கிலீக்ஸ். ஏராளமான பரபரப்புத் தகவல்கள் இந்தக் கட்டுரையில் இருக்கின்றன: இது ஒரு தொடராக வரப் போகிறது என்று தெரிகிறது: தலைப்பு விக்கிலீக்ஸ் பற்றி இருந்தாலும் எனக்கு தகவலாக இருந்தது இதுதான்-
"ஜார்க்கண்டில் இந்தியப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி 80 காவலர்களைக் கொன்ற கொடூரமான நிகழ்ச்சி நடப்பதற்கு சில நாட்கள் கழித்து கனடாவில் இருந்து இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு தகவல் வந்தது. அந்த தகவலைப் பற்றி இந்திய ஊடகங்கள் எவையும் மூச்சு விட்டதாக நினைவில் இல்லை. இந்தியாவையே உலுக்கி புரட்டிப் போட்டிருக்க வேண்டிய பூகம்பம் போலான அதி முக்கியமான இந்தியாவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் ஒரு தகவல் அது. அமெரிக்காவிலும், கனடாவிலும் அரசாங்க ரகசியங்களைக் களவு செய்யும் சைபர் கொள்ளையர்களைக் கண்காணிப்பதற்காக ஒரு சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்பு கனடாவின் மன்க் ஸ்கூல் ஆஃப் க்ளோபல் அஃபேர்ஸ் என்ற டொராண்டோ பல்கலைக்கழகத்துறையில் இருந்து இந்திய உளவுத் துறைக்கு அனுப்பியதே அந்த அதிர்ச்சிகரமான தகவல்.
இந்தியாவின் அதி முக்கியமான ராணுவம், வெளியுறவு, உள்நாட்டு ஆவணங்களும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தால் மிக மிக ரகசியம் என்று எச்சரிக்கை செய்யப்பட்ட பல்வேறு ஆவணங்களும், இந்தியா ஆப்கானிஸ்தானில் செய்து வரும் வேலைகள் பற்றிய தகவல்களும், இந்திய தூதர்கள், ஒற்றர்கள் பற்றிய தகவல்களும் ஒன்று விடாமல் களவாடப்பட்ட விபரத்தை அந்த ஆராய்ச்சி அமைப்பினர் இந்தியாவுக்குத் தெரிவித்தனர்."
காலப்போக்கில் ரகசியமே இருக்கக் கூடாது என்பது நடைமுறையாகி விடும் என்றுத் தோன்றுகிறது: ஒரு காலத்தில் அணு ஆயுதம் வல்லரசுகளுக்கு இடையில் சமன்பாடு உண்டாக்கியதேன்றால் இப்போது தொலை தொடர்பு திறன்.

அதில் நம் நாடு வீக்காக இருப்பது கவலைக்குரிய விஷயம்- அடுத்த தடவை போர் என்று வந்தால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் போவது ஆயுதங்களல்ல, தகவல்கள்தான்.

ஜியார்ஜியாவுடனான போரில் ரஷ்யா ஜியார்ஜியாவின் கணினிகளை முடக்கியதாக இருக்கிறக் குற்றச்சாட்டுகள் கவனத்துக்குரியவை.  இது தொடர்பான அருமையான கட்டுரை எகானமிஸ்ட் பத்திரிக்கையில் இருக்கிறது.


இத இதழில் வெளியான பதினைந்து படைப்புகில் ஒன்பது குறித்து என் கருத்தை எழுதி விட்டேன். பொதுவாக நிறைகள் இருக்கும் இடத்தில்தான் குறை காண வேண்டும் என்பதை ஒரு கோட்பாடாக வைத்திருக்கிறேன் :)

நான் முன்வைக்கிற குறைகளும் அந்த எண்ணத்தில் முன் வைக்கப்பட்டனவே. எங்காவது நிறைகளே காணாமல் போகும் அளவுக்கு குறைகளைப் பற்றிப் பேசி இருந்தால் மன்னிக்கவும்- அது என் நோக்கமல்ல.

யோக வாசிட்டம்- ஆகாசஜன் கதை

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், கோடிகள் என்று சொல்வது ஒரு கணக்குக்குத்தான்- காலவெளியின் தோற்றுவாயில் என்று கூட சொல்லலாம், அப்படிப்பட்ட கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒரு குக்கிராமத்தில், பிராமண குலத்தில், ஆகாசஜன் என்று ஒருவன் பிறந்தான். அவனது தந்தையின் பெயர் ஆகாசன் என்பதனால்தான் அவன் ஆகாசஜன் என்று பெயரிட்டழைக்கப்படுகிறானேயன்றி, அவனுக்கு இப்பெயரைச் சூட்டுவதற்கோ, வேறு பெயர் கொண்டு அவனை அழைக்காமலிருப்பதற்கோ, காரணங்கள் எதுவும் விசேடமானதாக இல்லை.

அவன் அந்தக் குக்கிராமத்தில் அந்தக் குடும்பத்தில் பிறந்தததற்கும் அதுபோலவே விசேடமானக் காரணங்கள் எதுவும் கிடையாது. உண்மையை அப்பட்டமாக சொல்வதென்றால், அவன் அந்தக் கிராமத்தில், அந்தக் குடும்பத்தில் பிறந்தவனல்லன். அவன் தோன்றியது ஞானாகாசத்தில். அவன் வாழ்ந்தது ஞானாகாசத்தில். அக்காரணத்தால்தானோ என்னவோ, அவனுக்கு அந்தக் குக்கிராமத்தில் வாழ்வதில் வருத்தமொன்றும் தெரியவில்லை. அவன் எப்போதும் நீண்ட, தங்குதடையற்ற மோன நிலையில் தன் நாட்களைக் கழித்து வந்தான்.

அவன் அனைத்து உயிர்களை நோக்கியும் சமபார்வை உடையவனாக இருந்தான். இதை சொல்லி விட்டு, பசுவைப் பார்க்கிற மாதிரிதான் பன்றியையும் பார்த்தான், நாயைப் பார்க்கிற மாதிரிதான் மனிதனையும் பார்த்தான் என்று சொல்லவும் வேண்டுமோ?

வேண்டுமானால் நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். எனக்கு இந்த வார்த்தை விளையாட்டுகள் அதி சீக்கிரமாகவே அலுப்பு தட்டி விடுகின்றன.

இவன் இந்தக் குக்கிராமத்தில், மரணமென்பதின்றி தன் பாட்டுக்கு தன் போக்கில் வாழ்ந்து வந்திருந்த வேளையிலே, கால தேவனின் பார்வை இவன் மேல் படலாயிற்று.

இவனைக் கண்ட மறு கணமே கால தேவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடலாயின . அவற்றில் சில:

"இது என்ன! என்னால் இவனைத் தீண்ட இயலவில்லையே! எத்தனை முயன்றாலும் என்னால் இவன் வரைகளைக் காண இயலாதபடிக்கு இவனது பரிமாணங்கள் விரிந்து கிடக்கின்றனவே! ஒரு பலகாரத்தை விழுங்குகிற மாதிரி இந்த உலகையே விழுங்கி ஏப்பம் விடுகிற எனக்கு இந்த ஆகாசஜன் புதிராக நிற்கிறான்- இவனைக் கட்டுக்குள் கொண்டு வருவது எவ்வண்ணம்! நான் நினைத்தால் இந்தப் படைப்பில் இருக்கிற எதையும் அழிப்பேன். ஆனால் இவன் முன் என் சக்திகள் செல்லுபடியாகாமல் செலவழிகின்றனவே... வாளின் முனை விஷத்தால் மழுங்கிய மாதிரி என் திறன்கள் இவன்கண் மொக்கையாகி விட்டன போல் தெரிகிறது. இருந்தாலும் பரவாயில்லை, முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். இந்த ஆகாசஜன் கதையை எப்பாடு பட்டேனும் முடித்தே தீருவேன்!"

இவ்வண்ணம் தன முயற்சியில் உறுதி  பூண்டவனாக மீண்டும் ஆகாசஜனை நோக்கித் தாக்குதல் தொடுக்கலாயினன் கால தேவன். இம்முறை அவன் தீவிர உறுதி பூண்டிருந்தமையால், தனக்கிருந்த தடைகள் அவ்வளவையும் உடைத்து ஆகாசஜனின் வீட்டுக் கதவுகளைத் தூளாக்கி உள்ளே நுழைந்தான் அவன்.

அத்தனையும் வீணே! ஆகாசஜனின் ஞானாக்கினி அவன் கண்கள் குருடாகும்படிப் பிரகாசித்தது: அதன் மகோன்னத தரிசனத்தைக் கண்ணுற்ற கணமே அவனது உறுதி குலைந்தது. இருந்தாலும் வந்த வேலையை முடிக்காமல் போவதில்லை என்ற முடிவில், முன்னமே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளை நோக்கிச் செல்கிற இயந்திரமாய் ஆகாசஜனை நெருங்கினான் கால தேவன்.

தன் ஆயிரம் கைகளால், ஆயிரம் என்ன ஆயிரம், தன் எண்ணற்ற நீண்ட இருகியக் கைகளால் ஆகாசஜனை அணைத்தான் கால தேவன். தன்னால் இயன்ற மட்டும் தன் சக்திகளைத் திரட்டி அவனை இறுக்கி அழிக்க  முயன்றான். தோற்றான். சித்த தேவனே, ஸ்திர புருஷனே, சங்கல்பனே அங்கு வந்து வீற்றிருந்தார்போல ஆடாது அசையாது அமர்ந்திருந்தான் ஆகாசஜன்.

தோற்றாலும் தன் முயற்சியைக் கை விடுவதாய் இல்லை கால தேவன். கொலைக் குற்றங்களில், உயிர் வதையில் தேர்ந்தவனாகிய எம தர்மராஜனிடம் சென்றான் அவன். நடந்ததனைத்தையும் இருந்து கேட்டு விட்டு, யமன் சொல்வான்:

"செயல்களால் உருவானது இந்த உலகம். செயல்களைக் கொண்டே அழியும். ஒருவன் நிகழ்த்திய செயல்களைக் கொண்டுதான் நான் அவனை அழிப்பது வழக்கம்.  நீ ஆகாசஜனின்  செயல்களைக் குறி வை. அவற்றின் விளைவுகளைக் கொண்டு அவனை அழித்து விடலாம்"

உற்சாகமாய் பூமிக்குத் திரும்பினான் காலதேவன். காடு, கரை, கடை, கண்ணி, கோயில்கள், குளங்கள் என்று துவங்கி எட்டு திசைகளில் ஒரு அணுவையும் மிச்சம் வைக்காமல் ஆகாசஜனின் செயல்களைத் தேடி ஓய்ந்தான் அவன். எங்கும் ஆகாசஜனின் தடயம் காணோம்.

திரும்பவும் தன்னிடம் வந்து இந்த தோல்வியை சொன்ன கால தேவனைக் கண் கொட்டாமல் நோக்கினான் யமன், சற்று நேரம். அதன் பின், ஒருவாறு தேற்றம் கொண்டவனாக, கால தேவனை நோக்கிப் புன்னகைத்தான் அவன்.

"தேவனே, களங்கமற்ற ஆகாசத்தில் பிறந்தவனல்லவா ஆகாசஜன். அவன் ஞானாகாசனேயன்றி வேறு எவருமில்லை. அவன் ஞான வடிவினன். அவன் செயல்களால் தோன்றியவனல்லன், ஞானத் தோற்றமாகிய  அவனுக்கு செயல்கள் கிடையாது. அவனை விட்டு விடு. எக்காரியமும் செய்யாதிருக்கிற அவனைப் பற்றுவது ஆகாத காரியம்," என்றான் யமதர்மராஜன்.

கால தேவனுக்கு வேறு வேலையா இல்லை? ஒருவாறு தன் இயலாமையை உணர்ந்தவனாக வீடு திரும்பினான் அவன்.

ஆனால் அதன் பின்னும் ஓன்று நடந்தது. காலம் அனைத்தையும் அழித்தாலும், அது எதையும் மரவாதிருக்கிறது, இல்லையா? கால தேவன் அதன் பின்னும் ஒரு முறை ஆகாசஜனை அடைய வந்தான்.

ஆமாம், மன்வந்தர  இறுதியில், 30,67,20,௦௦௦ ஆண்டுகளுக்குப் பின், தன் பெரும்பசியைத் தணிக்க  அகில அண்டங்களையும் விழுங்கியவனாய் பெருத்த வயிறும் துருத்திய நாவும் சிவந்த கண்களுமாய் ஆகாசஜனை நெருங்கிய கால தேவன் இம்முறையும் தோற்றான்.

ஞானாக்கினியாய்ப் பிரகாசித்து நின்ற ஆகாசஜனைக் கருதி அசையாது நின்றான், அயர்ந்த நிலையில் கால தேவன்.

அப்போது அங்கே வந்த யமன் சொல்வான், "அப்பா, இவனே சங்கல்ப புருஷன். இவனுக்கு அழிவு கிடையாது. தேவ தேவர்களும், இறைவர்களும் இறைவிகளும், கோள்களும் நட்சத்திரங்களும் அனைத்துமே லயத்தில் அடங்குகிற பிரளய காலத்திலும்கூட, யாராலும் ஏதொன்றும் செய்வதற்கில்லாதவனாய், சுயம்பிரகாசமாய், தனித்திருப்பான், தன் ஒளியில் அனைத்தையும் நிறைத்திருப்பான் ஆகாசஜன்," என்று.

"ஆமாம்," என்று அப்போதைக்கு ஒருவாறு ஒப்புக் கொண்டான் கால தேவன், தென்பட்ட அனைத்தையும் விழுங்கி ஆயிற்றா என்று கண்களை எட்டு திசைகளிலும் ஓட்டினான்.

"ஆயிற்று, வா, நம் வேலையைப் பார்ப்போம்," என்றான் கால தேவன். யமனும் அவனும் அவர்களுக்கெனக் காத்திருந்தப் பணிகளுக்காகக் காத்திருக்கத் துவங்கினர், செயல்வகை தெரியாமல்.

எதுவும் இல்லாமல் பாழாய்க் கிடந்தது அண்டம்.

ஆகாசஜன் தன்னொளியில் அனைத்தையும் நிறைத்து நின்றான்.

சொல்வனம் முப்பத்தொன்று - 1

போன தடவை எழுதும்போது பத்ரி அவர்கள் பாகிஸ்தானுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சொன்னதை கொள்கை அளவில் ஆதரித்து எழுதினேன். இப்போது அருணகிரி அவர்கள் அதற்கு எதிர்வினை ஆற்றிவிட்ட நிலையில் எப்படி எதிர் அணிக்குத்  தாவலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பாகிஸ்தான் உடம்பெங்கும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு வத்திப்பட்டியை உரசி  விளையாட்டு காட்டுகிற வீட்டுக்கு அடங்காத பெண். "எல்லாம் காஸ்தானே, மண்ணெண்ணெய் அங்கே கிடைக்கிறதா?" என்று கேட்பவர்களுக்கு- ஆமாம் ஐயா, சிலிண்டரைத் திறந்து வைத்துக் கொண்டு, "அடுப்பைப் பற்ற வைக்கப் போகிறேன், அதற்குள் என்னைக்  கட்டிப் புடிடா! கட்டிப் புடிடா!" என்று மல்லுக் கட்டுகிற ராட்சச மனைவி என்று சொல்கிறேன். சனியனோடு வாழவும் முடியாது வெட்டி விடவும் முடியாது.

பத்ரி வாழ வழி சொல்கிறார்- அருணகிரி, வெட்டிக் கொண்டு விடலாம் என்று சொல்கிறார்.
"சிதிலமடைந்த கூடு தேசமாய் ஆகி வருகிறது பாகிஸ்தான். சிந்து, பஞ்சாப், பலுசிஸ்தானம், வடமேற்கு என ஏகப்பட்ட உள்ளுறைப்பூசல்களைக் கொண்ட நாடு அது. பிரச்சினை கைக்கடங்காமல் போனால் மேற்கு நாடுகள் அதனைக் கூறு போடவும் தயங்காது. ஆனால் திறனின்றித் தோற்றவன் கண்டுபிடிக்கும் நொண்டிச்சாக்கு போல, அதற்கான பழியையும் பாகிஸ்தான் இந்தியாவின் மீதே சுமத்தும். பாகிஸ்தானை நேர்வழிப்படுத்தவே முடியாதா என்றால் அதற்கான விடை, அது இந்தியாவின் கையில் கிடையாது, அது இந்தியாவின் வேலையும் கிடையாது என்பதே."
 சண்டை என்று வந்தால் இப்படி எல்லாம் ஏச வேண்டியதுதான்- ஆனால் தீர்வு என்று தேடும்போது நாம் பாகிஸ்தானை அடிக்கிற மாதிரி அடித்துக் கொண்டு, மொத்தத்தில்  அணைத்துக் கொண்டு போவதைத் தவிர வேறு வழி இல்லை என்றுதான் தோன்றுகிறது. 

அவர்களுக்குப் போர் என்று வந்தால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் கிடையாது- இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நமக்கு? அது பாகிஸ்தானுக்கும் தெரியும்- அதனால் படுக்கை அறையில் ஒரு பேச்சு, நம்ம வீடு மனுஷர்கள் நாலு பேர் நம் வீட்டுக்கு வரும் நன்னாள் அன்று வரவேற்பு  அறையில் வேறு பேச்சு என்று அதன் முரண்போக்கு தொடரவே செய்யும். 

என்ன செய்வது? இந்தியாவும் பாகிஸ்தானும் சொத்து பிரித்துக் கொண்டு சேர்ந்து வாழும் பார்ட்னர்கள்  மாதிரி: ஒருத்தருக்கு இவ்வளவு கொடுத்தும் முதுகை விட்டு இறங்க  மாட்டேன் என்கிறானே என்ற கடுப்பு, இன்னொருத்தனுக்கு இவனை விட்டால் எனக்கு ஆளே இல்லையா, நான் எவ்வளவு பெரிய ஆள் பார் என்று வாழ்ந்து காட்ட வேண்டிய  நிர்பந்தம். 

அதற்கு பாகிஸ்தான் தேர்ந்தெடுத்த வழி, "நான் செத்தால் நீ காலி!" என்ற மிரட்டல்.

அது எல்லாம் இருக்கட்டும்- அருணகிரி பத்ரியிடம்  பாயிண்ட் பாயிண்டாக கேட்டிருக்கிறத் தப்பாட்டப் பாட்டுக்கு அவரால் பதில் பாட்டு போட முடியாது என்று தோன்றுகிறது-  அதிலும் இந்த மாதிரி கேட்டால் எப்படி பதில் சொல்வது? அவர் தன் சிலபல பதிவுகளைத் திருத்தி எழுதிவிட்டுதான் ஆககூடி இன்னொரு எதிர்வினை செய்ய முடியும்!
நாட்டின் வளம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் புத்தகக் கடை போட்டு மடிக்கணிணி பறிகொடுத்த கதையாகி விடும். நோய்க்கூறு மனநிலை இருப்பவர்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் முன் -யோசனையும் தெளிவும் முதலில் இருக்க வேண்டும். பறிகொடுத்தபின் புலம்ப தேசமும் சுதந்திரமும் கடைச்சரக்கல்ல.
பெல்ட்டுக்குக் கீழ எல்லாம் அடிக்கக்கூடாதுங்ணா!

என்னைக் கேட்டால் அருணகிரி ஒரு கோணத்தை விவாதித்திருக்க வேண்டும்- பாகிஸ்தானில் அரசியல், சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளைப் பெருமளவில்  கையில் வைத்திருக்கிறவர்கள் பொது மக்கள் அல்ல: நீங்கள் நினைத்த மாதிரியே  உயர் ராணுவ அதிகாரிகள்தான். எந்த அளவுக்கு என்று ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுவோம்! அதை யாராவது எதிர்வினை செய்யலாமே? அந்தக் கோணத்தைப் பார்க்காமல் பாகிஸ்தான் ஏன் சாவை நோக்கிப் பயணிக்கிறது, அது ஏன் அமைதியை நோக்கி அடியெடுத்து வைக்க மறுக்கிறது, எப்படிப்பட்ட வர்த்தக உறவை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை எல்லாம்  பேச முடியாது என்பது அடியேனின் எண்ணம்.

"சொல்வனத்தில் நாஞ்சில் நாடன் எழுதுகிறார்"- இப்படி ஒரு பேனரே வைக்கலாம். இந்த இதழில் புத்தகத் தலைப்புகளைப் பற்றி எழுதி இருக்கிறார். நானாயிருந்தால் ஒரு பெரிய லிஸ்ட் போட்டு ஒவ்வொரு புத்தகத்துக்கு மூன்று வரிகள் என்று அட்டவணைப் பதிவு செய்திருப்பேன். அவ்வளவுதான் நம்மால் முடியும்.

பல்லாண்டு காலமாகப் புத்தகங்களையும் நாடகங்களையும் திரைப்படங்களையும் தேடித் தேடிப் படித்த வாழ்க்கை  நாஞ்சில் நாடனின் இந்தக் கட்டுரையாக வடிவம் பெற்றிருக்கிறது- வெறும் தகவலாக இல்லாமல் உயிரோட்டமுள்ள ஒரு விஷயமாக  எப்படி எழுதுவது என்பது இந்த மாதிரி எழுத்தைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீளமாக இருந்தாலும் மலையாளத்தில் அற்புதமாய்த் தலைப்பு வைப்பார்கள், சிறுகதை, நாவல், நாடகத்துக்கு. பி.கெ.பாலகிருஷ்ண பிள்ளை எழுதிய ‘இனி ஞான் உறங்கட்டெ?’ எனும் நாவலை சாகித்ய அகாதமிக்காகத் தமிழாக்கம் செய்த, தமிழின் அற்புதமான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவரான ஆ.மாதவன் பட்டபாடு எனக்குத் தெரியும். பாரதப்போர் முடிந்த பிறகு, வெஞ்சினம் ஈடேறி வெற்றிக் கனிக்குப் பிந்தைய விரக்தி, உபபாண்டவர் மரணம் ஈந்த சோகம், அலுப்பு, களைப்பு, சோர்வு யாவும் தொனிக்க திரெளபதி கேட்பதானது அந்தத் தலைப்பு. கெஞ்சல் தொனியுடனும் விடுபட முயன்றும், ‘இனி ஞான் உறங்கட்டெ?’. திரெளபதியின் உறக்கம் எனத் தொடங்கி, தொடர்ந்து பல தலைப்புகள் பரிசீலித்து, ‘இனி ஞான் உறங்கட்டும்’ என்று நிலைத்தார் ஆ.மாதவன். எனக்கும் அதில் கொஞ்சம் பங்குண்டு. ஆனால் இருவருக்குமே நிறைவில்லாத தலைப்பு. யோசித்து, மேலும் பொருத்தமாக ஒரு தலைப்புச் சொல்லுங்கள், ஒரு சவால் எனக்கொண்டு.
உலகத்து நாடகங்களில் பல, கருத்தாழம் மிக்க தலைப்புகள் கொண்டவை. உங்களுக்கு நினைவிருக்கும் மலையாளத்து தோப்பில் பாசி நாடகத் தலைப்பு ‘நிங்ஙள் என்ன கம்மூனிஸ்ட் ஆக்கி’. வேறொரு மலையாள நாடகத் தலைப்பு ‘கிறிஸ்துவின்ட ஆறாம் திருமுறிவு’. கிறிஸ்துவை சிலுவையில் அறையும்போது ஆணியடித்து ஆழமான காயங்கள் ஏற்படுத்திய இடங்கள் ஐந்து. அந்த நாடகம் ஆறாவது ஆணி பற்றிக் குறிப்புணர்த்துவது. முறிவு எனில் காயம், திரு என்பது சிறப்பு அடைமொழி.
பரபரப்பாக அந்தக் காலத்தில் பேசப்பட்ட பஞ்சாபி நாடகங்களின் தலைப்புகளே நகைச்சுவையுடன் இருந்தன. ‘சடீ புட்டேனு ஜவானி’ எனும் நாடகத் தலைப்பின் தமிழ்ப் பெயர்ப்பு என்றால் ‘கிழவனுக்கு வாலிபம் ஏறிவிட்டது’ எனலாம். இன்னொரு தலைப்பு, ‘ஸாலி ஆதே கர்வாலி’. தமிழில், ‘மைத்துனி பாதி வீட்டுகாரி’ எனலாம். எங்கள் ஊரில் ஒரு சொலவம் உண்டு. ‘அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி’ என்று. அதுபோல.
எத்தனை தடவை வேண்டுமானாலும் இந்தக் கட்டுரையைப் படிக்கலாம்: அவ்வளவு  சரக்கு இருக்கிறது இதில்.


"தலைசீவாத கதாநாயகன், அவனுக்கென்று வேலை எதுவும் இருக்காது; கால் சட்டை தெரியும் அளவுக்கு உயர்த்திக்கட்டப்பட்டுள்ள கைலியும் வாயில் புகையும் பீடியும் தான் இன்றைய தமிழ் இளைஞர்களின் அடையாளம் என்று சொல்கிறது தமிழ் சினிமா. கதாநாயகிக்கு காதலிக்கவும் செத்துபோகவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் பேச தெரியக்கூடாது எனபது எழுதப்படாத விதி. ஆனால் தமிழ் கிராமத்து பெண்களே மறந்துவிட்ட தாவணியை உடலில் சுற்றிக்கொண்டு கதாநாயகன் போகும் வழியில் குறுக்கேயும் மறுக்கேயும் போய் அவனைக் கண் சிமிட்டாமல் சைட் அடிக்க தெரிந்திருக்க வேண்டும். கதாநாயகன் வாயெல்லாம் பல்லாக தலையை ஆட்டிக்கொண்டே நிற்க வேண்டும். கடந்த மூன்றாண்டுகளாக வரும் தமிழ் படங்களை பார்த்திருப்பவர்கள் கவனித்திருக்கலாம். இப்படிப்பட்ட ‘யதார்த்தத்தை’த்தான் முன்வைக்கிறது இன்றைய தமிழ் சினிமா."
 என்று எழுதுகிற வெ. சந்திரமோகன் தமிழ் சினிமாவை ஏகத்துக்கும் தாக்கி இருக்கிறார்- கூடவே நமக்கெல்லாமும் பாட்டு கிடைக்கிறது.
"‘சின்ன தம்பியில்’ ரஜினி படம் பார்க்கும் கவுண்டமணி தான் நினைவுக்கு வருகிறார். ஒரு வயதானவரை ‘சைடு வில்லன்’ தள்ளி விட்டதும் கூட்டம் பதறிப்போக கவுண்டர் மட்டும் கை தட்டுவார். அவருக்காவது படத்தில் கண் தெரியாது. நம் மக்களுக்கு சினிமா என்றாலே என்ன என்று தெரியவில்லை."
நானும் ஓவராத்தான் திட்டி இருக்காருன்னு நினைக்கிறேன். ஆனால் அண்மையில் வெளி வந்து பல தரப்பினரிடையும் பாராட்டு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் களவாணி குறித்து இவர் எழுதி இருக்கும் இந்தக் கட்டுரையில் நியாயங்கள் இல்லாமல் இல்லை. 

நானறிந்தவரை கேபிள் ஷங்கருக்கு அடுத்தபடி இவர் ஒருவர்தான் களவாணியை சராசரி படமாகப் பார்த்திருக்கிறார். அந்த ஒரிஜினாலிட்டிக்காகவே இருவரையும் பாராட்டலாம். 

கான் திரைப்பட விழாவில் முதல் பரிசு பெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படத்துக்கு யூட்யூப் சுட்டி தந்திருக்கிறார்கள்.ஒரு நிமிட அளவு கூட ஓடுவதில்லை இந்த படம்- ஒரு வசனம்கூட இல்லை. இசை, காட்சிகள் வாயிலாக உன்னதமான ஒரு உணர்வுக்கு நம்மை ஆளாக்குகிறது இந்தப்  படம்.

நம்ம ஊரில் ஏன் இப்படி எடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று கேட்க மாட்டேன்- எல்லாவற்றையும் நாமே செய்து விட்டால் அப்புறம் மற்றவர்கள் எல்லாம் என்ன செய்வதாம்? பிழைத்துப்  போகட்டும், விடுங்கள். 

திரைப்படங்கள் குறித்துப் பேச வந்தாச்சு. ரவி நடராஜன் இரு பரிமாண அனிமேஷன் படங்கள் குறித்து டெக்னிகலாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் நான் படித்த ஒரு ஆச்சரியப்படும் விஷயம்:
 "அந்நாளைய இரு பரிமாண அனிமேஷன் திரைப்படங்களில் கூர்ந்து கவனித்தால் சில விஷயங்கள் சுவாரசியமாக இருக்கும். அதிகம் ஜூம் (zoom) காட்சிகள் இருக்காது. பான் (Pan) காட்சிகளே இருக்கும்....
...ஒரு இடத்தில் தொடங்கி காட்சியை பதிவு செய்து, அதே மட்ட நிலையில் இடதோ அல்லது வலது பக்கத்திற்குகோ காமிராவை நகர்த்திய வண்ணம் காட்சிகளை பதிவு செய்கிறார்கள். இது ‘பான் ஷாட்’ என்று சொல்லப்படும். மலைமீதிருந்து தூரத்தில் ஒரு ஏரி தெரிகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்படி வீடியோ எடுப்பீர்கள்? தூரத்தில் உள்ள ஏரியை காட்சியாக படம்பிடித்து மெதுவாக ஜூம் செய்வீர்கள். அதாவது, பார்ப்பதற்கு, ஏரி அருகே வருவது போல காட்சியளிக்கும். ஏரி அருகே உள்ள ஒரு மலரை பதிவு செய்து உங்கள் உள்ளிருக்கும் பாலு மகேந்திராவை உங்கள் நண்பர்களிடம் காட்டுவதில்தான் எத்தனை மகிழ்ச்சி!"
இதை ஏன் அனிமேஷனில் செய்ய அந்த காலத்தில் கஷ்டப்பட்டார்கள்? அந்த விவரம் படிப்பதற்கே சுவையாக இருக்கிறது- மனசைக் கொஞ்சம் டெக்னிக்கலா மாற்றிக் கொண்டு ரவி நடராஜனின் கட்டுரையைப் படிக்க இங்கே போங்க- "அனிமேஷன் திரைப்பயணம்: 02 - இரு பரிமாண உலகம்"